சனி, 6 செப்டம்பர், 2014

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி – 13

சென்ற பதிவின் தொடர்ச்சி




சுவாமி தாங்கள் உரைத்தது உண்மையாக இருக்க வேண்டும் என தனது

மகளைத் தேட ஆரம்பித்தார். 2 நாட்கள் கழித்து அவரின் தூரத்து உறவினர்

வீட்டில் இருந்து தகவல் வந்தது. அவரது தாய் திட்டினாள் என கோபித்துக்

கொண்டு வந்து விட்டாள். உங்கள் பெண் எங்கள் வீட்டில் பத்திரமாக

இருக்கிறாள் வந்து அழைத்துச் செல்லுங்கள் என்றனர். தந்தைக்கு ஒரே

மகிழ்ச்சி. இருந்தாலும் வயதுப் பெண் காணாமல் போய்விட்டாள் என

ஊருக்குள் செய்தி பரவி வாய்க்கு வந்தபடி வசைபாட ஆரம்பித்து விட்டனர்

பலர்.

வேகமாக அவரது உறவினர் வீடு நோக்கி சென்று மகளை அழைத்தால்,

அவள் சமாதானம் அடையவே இல்லை. நீண்ட நேரம் கழித்துதான் நாடியில்

சொன்ன விஷயம் நினைவுக்கு வந்திருக்கிறது. புற்று மண்ணை எடுத்து

வந்து கூப்பிட்டவுடன் வருகிறேன் என்று அந்தப் பெண் ஒப்புக் கொண்டாள்

சரி ஊருக்கு வர வேண்டாம் என்று அவளது மற்றுமொரு நெருங்கிய

உறவினர் கேரளாவில் உள்ளனர். அங்கு சென்று ஒரு மண்டலம் தங்க

வைத்தனர். புத்தி மாறியது. புதிய வாழ்வு மலர்ந்தது. இதற்கிடையில்

என்னை மீண்டும் வந்து சந்தித்தார். அந்த பெண்ணின் தந்தை முருகனிடம்

நாடி கேட்டு திருமணம் நடத்தலாம் என இருக்கிறேன் என்றார்.

“தற்காலம் வேண்டாம்

பொற்காலம் வரும்

பொறுமையாய் இரு

பிரியமாகும்”

என முருகன் உரைத்தார். சரி என விட்டு விட்டார். முருகன் முன்பே

நாடியில் சொன்னது சூட்சுமமாக இருந்ததை சம்பவம் நடந்த பின்பே உணர

முடிந்தது.

இன்னுமொரு நபர் சுயதொழில் தொடங்கலாமா என நாடியில் கேட்டார்.

அதற்கு பின்வருமாறு வந்தது.

“தொட்டெடுக்கும் தொழிலது

தொல்லை தரும் அல்லல்தரும்

அற்புத மாற்றம் வர

ஆண்டு ஒன்று போக வரும்

வருமான வழி கிட்டும்

வளம் கிட்டும்

சும்மா இரு”

என்ன இது இப்படி பலன் வருகிறது. சும்மா இருந்தால் என்னாவது

என சூளுரைத்து அந்த நபர் தொழிலைத் தொடங்கினார். இறுதியாண்டு

மாணவர்களுக்கு பிராஜக்ட் (project) செய்து கொடுக்கும் தொழில். கூட்டாக

ஆரம்பித்து சில இலட்சங்களைக் முதலீடு செய்தார். நல்ல கூட்டம்

வந்தது. வருமானமும் பலமடங்கு உயர்ந்தது. அவருக்கு மகிழ்ச்சி நாடியில்

வேண்டாம் என்றாலும் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது என பெருமிதம்

கொண்டார். கடைசியில் இவரால் அனைவருக்கும் குறித்த தேதியில்

பிராஜக்ட்டுகளை முடித்து தர இயலவில்லை. சிலருக்கு பணத்தை

திருப்பித் தர நேர்ந்தது. இன்னும் சிலர் கோபத்தால் இயந்திரங்களை அடித்து

நொறுக்கி பெரும் சேதம் விளைவித்தனர். வழக்கு ஏற்பட்டது. இறுதியில்

தொழிலை மூடிவிட்டார். சில இலட்சம் கடன் ஏற்பட்டது. நாடி படித்து

பயன் இல்லை என்றாலும் தனது தவறுக்கு வருந்துகிறார். எனவே

மன்னித்து நாடி படித்தேன்.

“அடிமை பணிகொள்

அற்புதம் கிட்டும்”

என வந்தது. தற்போது சிறப்பாக பணிக்குச் சென்று வருகிறார்.

நாடியில் வருகின்ற பரிகாரங்கள் சிறிதும் யோசித்துக் கூட பார்க்க

முடியாத மிக எளிமையாக வருகிறது. செய்த உடனேயே வெற்றி

கிட்டுவதால் உண்மையை உணர்ந்துக் கொள்ள முடிகிறது. சித்தர்களை

பலர் நாடுவதற்குக் காரணம் சாதாரண உப்பில் கூட உயர்வான பல

பரிகாரங்களை அவர்கள் உரைப்பதால் தான். சித்தர்கள் நம்மிடம்

பிரதிபலனாக எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான் அது உண்மையான பக்தி.


ஒரு வயதான முதியவர் என்னை வந்து சந்தித்தார். அவருக்கு கைலை

மலை செல்ல வேண்டும் என்ற தீராத ஆசை இருந்தது. வயது 80

ஆகிவிட்டது. பணத்திற்கும், உடல் நலத்திற்கும் எந்தவித குறையுமில்லை.

ஆனாலும் கைலை மலை செல்ல முடியவில்லையே என்பது வருத்தம்.

எனது வருத்தம் தீர முருகப் பெருமான் என்ன உரைக்கிறார் என கேட்டு

அமர்ந்தார். முருகன் ஜீவநாடியில் பின்வருமாறு உரைத்தார்.

“நாட்டத்தை நடுவில் வைத்து

 நம் நம் நம் எனச் சொல்லி

ஓட்டத்தை ஒடுக்கி வைத்து

 ஓம் ஓம் ஓம் எனச் சொல்லி

ஆட்டத்தை அடுக்கி வைத்து

 அம் அம் அம் என்று சொல்லி

கூட்டத்தை ஒதுக்கி வைத்து

 கூடாத கூட்டு கூடிடாமல்

கூடினால் முடியாத கூட்டை

 ஊட்டமுடன் உழைக்க வைத்து

தேகத்தை மறைக்க வைத்து

 தேடுதல் ஓங்கி நிற்க

அம் உம் மம் என ஆகி

 ஒடுக்கமானால் அடக்கமாகும்

கைலை தெரியுமே”

எனக்கே ஒரே அதிர்ச்சி. இவ்வளவு வேகமாக இந்த பாடல் வந்தது. விளக்கம்

சொல்ல முடியுமா என யோசித்துக் கொண்டே அந்தப் பெரியவரை

நோக்கினேன். அவர் முருகா! முருகா! என உரக்கக் கதறிக் கொண்டு

கண்ணீர் மங்க கதறிக் கொண்டிருந்தார். ஐயா இது சத்தியமான ஜீவநாடி

சொல்வது அந்த முருகனே, ஞானஸ்கந்தர் தெய்வம். அவர் இதை நாம்

சாதாரணமாக எண்ணக் கூடாது. நான் எந்த மந்திரங்களை ஜபம் செய்து

வருகின்றேனோ அதை அப்படியே ஒரு எழுத்துக் கூட பிசகாமல் நாடியில்

வந்துவிட்டது. இது எப்படி சாத்தியம் என்று கூடப் புரியவில்லை. மிகவும்

உயர் நிலையில் உள்ள ஆன்மிகவாதிகளுக்கு மட்டுமே புரிந்த இந்த

இரகசியத்தை முருகப் பெருமான் ஜீவநாடி மூலம் ஒரே ஒரு நொடியில்

சொல்லி விட்டார் என்று இந்த பாடலுக்கு சுமார் ஒரு மணி நேரம் எனக்கு

விளக்கம் கொடுத்தார். என் கைகள் இரண்டையும் இறுகப் பிடித்து முருகன்

அருள்! எல்லாம் முருகன் அருள்! என்று என்னையும் வாழ்த்தி விபூதியை

என் நெற்றியில் பூசிவிட்டு, சிறிது என் வாயிலும் போட்டு வாழ்த்தினார்.


அவர் சொன்ன விளக்கங்களை என்னால் ஐம்பது சதவீதம் மட்டுமே புரிந்து

கொள்ள முடிந்தாலும் முருகனது திருவிளையாடலை எண்ணி வியந்தேன்.

80 வயதுப் பெரியவரை ஆன்மிகத்தில் பழுத்த பழத்தையே அசத்திவிட்ட ஸ்ரீ

ஞானஸ்கந்த மூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்!

                            “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்”


1 கருத்து: